ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசி தோன்றிய கதை

Published On 2018-12-18 04:41 GMT   |   Update On 2018-12-18 04:41 GMT
இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசி தோன்றிய வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்படச்செய்தார். அவர்கள் பிரம்மாவை கொல்ல முயன்ற போது, அவர்களைத் தடுத்த மகாவிஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும் படியும், அவர்கள் கேட்கும் வரத்தை தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.

மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தை கேட்டார். அசுரர்களானாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக் கொண்டு, ‘பகவானே, ஒரு விண்ணப்பம், தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்’ என்று வேண்டினார்கள். பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், அவனின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தை கேட்டனர்.

மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலை (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, பகவானே, தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாக கடைபிடிக்க வேண்டும்.

விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. இந்த விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள்.

‘காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’ என்று இந்த விரதத்தை மகிமைப் பற்றி அக்னி புராணம் எடுத்துரைக்கிறது. இந்த விரதத்தின் சிறப்பு பற்றி சிவபெருமானே, பார்வதி தேவியிடம் எடுத்துக் கூறியுள்ளார் என்பது புராணங்கள் கூறும் தகவல்.

மாதம் இரு ஏகாதசி என்று 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது. இவற்றில் மார்கழி வளர்பிறையில் வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ என்றும் அழைப்பார்கள்.

வைகுண்ட ஏகாதசி அன்று, விஷ்ணு ஆலயங்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பு விழா நடத்தப்படும். இறைவனை தொழும் ஜீவாத்மா, வைகுண்ட வாசலில் வழியாக பரமாத்மாவை சேருகிறது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், இந்த சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழா அதிகாலை வேளையிலேயே நடைபெறும். இதில் மக்கள் பலரும் கலந்து கொண்டு, இறைவனுக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை கண்டுகளித்து, சொர்க்க வாசலின் வழியாக வெளியே வருவார்கள்.
Tags:    

Similar News