ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நாளை நடக்கிறது

Published On 2018-12-24 06:08 GMT   |   Update On 2018-12-24 06:08 GMT
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது.
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. இதில், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு வாய்ந்தது. பகல்பத்து. ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 7-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

18-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் ரத்தினஅங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் ஆஸ்தானமிருந்து அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழி பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெறுகிறது.

இதையொட்டி மாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை அடைகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருமாமணி மண்டபத்தை வந்தடைகிறார். அங்கு மாலை 6 மணி முதல் மாலை 6.15 மணிவரை திருக்கைத்தல சேவை (நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில்) நடைபெறுகிறது. மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொது ஜனசேவையும் நடைபெறுகிறது. இரவு 11.30 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன் நள்ளிரவு 12.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான நாளை(செவ்வாய்க்கிழமை) திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு, மாலை 5.15 மணிமுதல் 6.15 மணிவரை வையாளி வகையறா கண்டருளுகிறார். பின்னர் மாலை 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைகிறார். அங்கு இரவு 8.15 மணிமுதல் 9.30 மணி வரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு, வீணை வாத்தியத்துடன் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

10-ம் திருநாளான 27-ந்தேதி தீர்த்தவாரியும், 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். 
Tags:    

Similar News