ஆன்மிகம்

நாமக்கல் ஆஞ்சநேயர் அன்றும்...இன்றும்

Published On 2019-01-05 08:19 GMT   |   Update On 2019-01-05 08:19 GMT
நாமக்கல் ஆஞ்சநேயர் தலத்திற்கு வரும் பக்தர்கள் மிகவும் பயபக்தியுடன் ஸ்ரீஆஞ்சநேயரிடம் தமது குறைகளை சமர்ப்பித்து தம்மால் செய்ய முடியாத செயல்களையும் ஸ்ரீஆஞ்சநேயர் உதவியால் நிறைவேற்றுகிறார்கள்.
நாமக்கல் நகரில் நடுநாயகமாக விளங்கும் மலையான சாளக்கிராமத்தை நேபாள தேசத்திலிருந்து எடுத்து வந்து ஸ்ரீநரசிம்ம மூர்த்தி திருஉளப்படி இந்நகரில் ஸ்தாபனம் செய்து ‘ஸ்ரீநாமகிரி’ நாமக்கல் என்னும் பெயரை நிலை நாட்டிய பெருமை ஸ்ரீஆஞ்சநேயரையே சார்ந்தது.

நமது ஐயப்பாடு நீங்கவே விஸ்வரூபத் கோலத்துடன் நிமிர்ந்து கைகூப்பி நிற்கிறார். மேலே விதானம் இன்றி திறந்த வெளியில் காற்று, மழை, வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு கம்பீரமாக தரிசனம் கொடுக்கிறார்.

இன்னமும் வளர்ந்து கொண்டிருப்பதால் மேல்விதானம் கட்டப்படவில்லை. இதைத் தவிர லோகநாயகனான ஸ்ரீநரசிம்மரே கிரி உருவில் மேல்விதானமின்றியிருப்பதால் தாசனான தனக்கும் அது தேவையில்லை என்று முன்னோர்கள் விதானம் கட்ட முயற்சித்தபோது ஸ்ரீ ஆஞ்சநேயர் சொப்பனத்தில் அருளியதாக சொல்லப்படுகிறது. இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் மிகவும் பயபக்தியுடன் ஸ்ரீஆஞ்சநேயரிடம் தமது குறைகளை சமர்ப்பித்து தம்மால் செய்ய முடியாத செயல்களையும் ஸ்ரீஆஞ்சநேயர் உதவியால் சாதித்து கொண்டு தங்களால் இயன்ற வழிபாடுகளை நிறைவேற்றுகிறார்கள்.

நவக்கிரகங்களில் குரூரமான சனி, ராகு, இவர்கள் பிரீதிக்காக விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணையில் செய்த உளுந்துவடைகளால் செய்த மாலைகள் சாற்றியும், விசேஷ திரவியங்களால் அபிஷேகங்கள் செய்வித்தும், புஷ்பங்களாலும் வாசனை சந்தனத்தாலும் அலங்காரம் செய்து மகிழ்ந்தும் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்துகிறார்கள்.

ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டால் நற்புத்தி, சரீரபலம், கீர்த்தி, அஞ்சாமை, நோயின்மை, தளர்ச்சியின்மை, வாக்கு சாதூர்யம் முதலிய நன்மைகள் ஏற்படும்.
Tags:    

Similar News