ஆன்மிகம்

கோட்டை மாரியம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம் நாளை நடக்கிறது

Published On 2019-02-07 04:45 GMT   |   Update On 2019-02-07 04:45 GMT
திருமங்கலம் நாடார் இளைஞர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நாளை (வெள்ளிக்கிழமை) திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் கோட்டை மாரியம்மனுக்கு முளைப்பாரி காணிக்கை செலுத்தப்படுகிறது.

இதையொட்டி திண்டுக்கல் பெரியகடை வீதியில் உள்ள நாடார்கள் பேட்டையில் நாளை மதியம் 12 மணிக்கு கோட்டை மாரியம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அப்போது மாரியம்மனுக்கு மாவிளக்கு, படையல், நைவேத்தியம், முளைப்பாரி காணிக்கை செலுத்தி பூஜைகள் நடைபெறுகின்றன.

இதையடுத்து மாலை 4 மணி முளைப்பாரி ஊர்வலம் தொடங்குகிறது. இதில் மாதர் சங்கத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுக்கிறார்கள். இந்த ஊர்வலம் 4 ரதவீதிகள் வழியாக வலம் வந்து கோட்டை குளத்தை சென்றடைகிறது. பின்னர் அங்கு முளைப்பாரி செலுத்தப்படுகிறது.

இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாரியம்மனுக்காக பால்குட ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த பால்குட ஊர்வலம் பெரியகடை வீதி நாடார் பேட்டையில் உள்ள கருப்பணசாமி கோவிலில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படுகிறது. இதில் 4 ரதவீதிகள் வழியாக கோட்டை மாரியம்மன் கோவிலை பால்குட ஊர்வலம் சென்றடைகிறது. அங்கு கோட்டை மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்படுகிறது.

பின்னர் கோவில் முன் மண்டபத்தில் மாதர் சங்கத்தினரால் பூக்கோலம், மாக்கோலமிடப்படுகிறது. மாலை 6 மணிக்கு சுமார் 8½ அடி உயரத்தில் நாமக்கல் நரசிம்மர் அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும் கோட்டை மாரியம்மனுக்கு சந்தனகாப்பு, நைவேத்தியம் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக சுண்டல், புளியோதரை வழங்கப்படுகின்றன.

இரவு 9 மணிக்கு நண்பர்கள் இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் திருமங்கலத்தை சேர்ந்த நாடார் இளைஞர் சங்க தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சரவணன், பொருளாளர் ஸ்ரீதரன், துணைத்தலைவர் பூமண்டலம், உதவி செயலாளர் ரவீந்திரன் மற்றும் மாதர் சங்கத்தினர் செய்துள்ளனர். 
Tags:    

Similar News