ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் ரத்து

அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் ரத்து

Published On 2020-05-06 10:00 GMT   |   Update On 2020-05-06 10:00 GMT
ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் இன்று மற்றும் நாளை சிறப்புமிக்க சித்ரா பவுர்ணமி கிரிவலத்தில் பக்தர்கள் யாவரும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாத வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை அடைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. எனினும் சாமிக்கும், அம்மனுக்கும் 6 கால பூஜைகளும், அபிஷேகங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான சித்ரா பவுர்ணமி இன்று (புதன்கிழமை) இரவு 7.01 மணிக்கு தொடங்கி மறுநாள் 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 5.51 மணி வரை நடைபெற உள்ளது. வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

இந்தநிலையில் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் இன்று மற்றும் நாளை சிறப்புமிக்க சித்ரா பவுர்ணமி கிரிவலம் பக்தர்கள் யாவரும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாத வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் பக்தர்களும் கிரிவலம் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக சித்ரா பவுர்ணமி அன்று 10 லட்சம் பக்தர்கள் வரை கிரிவலம் செல்வார்கள்.

சித்ரா பவுர்ணமி தினமான நாளை மற்றும், 7ல், பக்தர்கள் கோவிலினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வசந்த உற்சவம் கடந்த, 26ல், தொடங்கி சுவாமி உற்சவருக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதை, www.arunachaleswarartemple.tnhrce.in என்ற, கோவில் இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதை பக்தர்கள் காணலாம்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

வேலூரில் சித்ரா பவுர்ணமியன்று நள்ளிரவில் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்பட 7 கோவில்களில் இருந்து பு‌ஷப்பல்லக்கு ஊர்வலம் நடைபெறும். ஊரடங்கால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News