ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோவில்

இந்த மாதமும் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

Published On 2020-06-12 03:59 GMT   |   Update On 2020-06-12 03:59 GMT
ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இந்த மாதமும் சபரிமலை கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. எனினும் கோவிலில் பூஜைகள் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் கோவில்களை திறக்க அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதில் மத்திய அரசு வழங்கிய அறிவுரைகளை பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்து இருந்தது.

இதற்கிடையே தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கோவில் தந்திரி மகே‌‌ஷ் மோகனரு பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து நிருபர்களை சந்தித்த மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் இந்த மாதமும் சபரிமலை கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவித்தார். மேலும் சபரிமலையில் வருகிற 19-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு கொண்டாடப்பட்டு இருந்த திருவிழாவும் ஒத்திவைப்படுவதாக அறிவித்தார்.
Tags:    

Similar News