வழிபாடு

அத்தி மரத்தால் செய்யப்பட்ட 32 அடி உயர விநாயகர் சிலை வெள்ளோட்டம்

Published On 2022-08-29 04:43 GMT   |   Update On 2022-08-29 04:43 GMT
  • 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.
  • இந்த விநாயகர் சிலை 4 டன் எடை கொண்டது.

விஸ்வரூப விநாயகர் குழு சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து 32 அடி உயரத்தில் விநாயகர் சிலை ஊர்வலமாக நாகூர் வெட்டாற்று பாலம் வரை எடுத்து செல்லப்படும்.

இந்த நிலையில் விஸ்வரூப விநாயகர் குழுவினர் முயற்சியால் முழுவதும் அத்திமரத்தால் செய்த 32 அடி உயர விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டது.

இந்த விநாயகர் சிலை நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. நீல தெற்கு, வடக்கு என 4 வீதிகளின் வழியாக விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டது. தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் வருவாய்த்துறையினர், நாகை நகரபோலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இதுகுறித்து நாகை விஸ்வரூப விநாயகர் குழுவினர் கூறியதாவது:- பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட பணத்தின் மூலம் புதிய முயற்சியாக அத்தி மரத்திலேயே விநாயகர் சிலை வடிவமைக்க முடிவு செய்தோம்.

இதற்காக டெல்டா மாவட்டங்களில் இருந்து 83 அத்தி மரங்கள் சேகரித்தோம். இந்த மரங்களில் 32 அடி உயரம் 18 அடி அகலத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விநாயகர் சிலை 4 டன் எடை கொண்டது. விநாயகர் சிலையை விழா காலங்களில் ஊர்வலமாக எடுத்து செல்ல திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து 8 டன் எடை கொண் தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தல் பகுதியை சேர்ந்த ஸ்தபதி திருநாவுக்கரசு என்பவர் செய்து கொடுத்தார்.

வெள்ளோட்டத்திற்கு பின்னர் விநாயகர் சிலை கோவில் அருகே பாதுகாப்பாக வைக்கப்படும். இதை தொடர்ந்து வருகிற 31-ந் தேதி(புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி தினத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.இதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக நாகூர் வெட்டாற்று பாலம் வரை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் என்றனர்.

Tags:    

Similar News