சூரியபிரபை, பூத வாகனங்களில் காளஹஸ்தீஸ்வரர் வீதி உலா
- மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
- கோலாட்டங்கள் நடந்தன.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 10 மணியளவில் உற்சவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கங்காபவனியோடு சூரியபிரபை வாகனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பலித்தனர்.
அவர்களுடன் மூஷிக வாகனத்தில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், பக்த கண்ணப்பர் சப்பரங்களில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வாகனங்களுக்கு முன்னால் மேள தாளங்கள், மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. கோலாட்டங்கள் நடந்தன. பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடி சென்றனர். நான்கு மாடவீதிகளில் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம், நெய் தீபாராதனை காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 9 மணியளவில் பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.