வழிபாடு

ஏக்கங்களை தீர்க்கும் கிறிஸ்துமஸ்

Published On 2022-12-20 08:38 GMT   |   Update On 2022-12-20 08:38 GMT
  • கிறிஸ்துமஸ் நாளில் உதித்த எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவாராக.
  • இந்த கிறிஸ்துமஸ் நாளிலும் இறைவன் இயேசு வழங்க வந்த அத்தனை பாக்கியங்களும் உங்கள் மீது வருவதாக.

வெளிநாடு ஒன்றில் பெண்மணி ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள். அது குளிர்காலம். அந்தப் பெண்மணி அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அலுவலகத்தின் வரவேற்பு அறையிலிருந்து அந்தப் பெண்மணிக்கு அழைப்பு வந்தது. "உங்களைப் பார்ப்பதற்காக இரண்டு பேர் வந்திருக்கிறார்கள்" என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம்! ஏனெனில், தன்னை கவனிப்பதற்கு, தன் மீது கரிசனை காட்டுவதற்கு யாருமே இல்லை என்ற ஏக்கம் அந்தப் பெண்மணியின் மனதில் இருந்து வந்தது. "யாராவது என்னிடம் அன்பு காட்டமாட்டார்களா?" என்று எதிர்பார்த்திருந்த நிலையில், மனதில், தன்னை தேடி வந்திருப்பது யாராக இருக்கும்? என்ற கேள்வியுடன் வரவேற்பறைக்கு விரைந்து சென்றார்.

அங்கே, ஓர் ஆணும் பெண்ணும் அவருக்காக காத்திருந்தனர். அந்த ஆண் கையில் கிட்டார் இசைக்கருவி இருந்தது.

அவர்கள் இருவரும், "அம்மா, உங்கள் கணவர் நம் நாட்டின் ராணுவத்தில் பணியாற்றுகிறார் என்பதும், அவர் தற்போது ராணுவப் பணியில் தூர தேசம் ஒன்றிற்கு சென்றிருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும். மனைவியாகிய உங்களை அவர் நினைவுகூர்ந்து, உங்களுக்காக ஒரு பாடல் பாடும்படி எங்களை அனுப்பியிருக்கிறார்" என்று கூறினார்கள்.

அதன்படியே அவர்கள் பாடத் தொடங்கினார்கள். அந்தப் பாடல், அந்தப் பெண்மணியின் கணவர் ராணுவப் பணிக்காக வெளிநாட்டுக்குச் செல்வதற்கு முன்பு வீட்டில் பாடிக்கொண்டிருந்த பாடல் ஆகும். அந்தப் பாடலைக் கேட்டதும் பெண்மணி உணர்ச்சிவசப்பட்டார். கணவரின் நேசத்தை நினைத்து அவரது கண்களில் கண்ணீர் வழிந்தது.

அந்தப் பெண்மணி பாடலை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த வேளையில், அலுவலக கதவைத் திறந்து உள்ளே ஒரு நபர் நுழைந்தார். அவர் வேறு யாருமல்ல! ராணுவப் பணிக்காக தூர தேசத்திற்குச் சென்றிருந்த அந்தப் பெண்மணியின் கணவர்தான்.

ராணுவச் சீருடையுடன் நேராக தன் மனைவியை காண்பதற்கு மனைவி பணியாற்றும் அலுவலகத்திற்கே அவர் வந்திருந்தார். நெடுங்காலம் கழித்து கணவரை கண்ட மகிழ்ச்சியில் அந்தப் பெண்மணி ஓடோடிச் சென்று அவரை கட்டியணைத்துக் கொண்டார். அவரும் மனைவியை அன்போடு தழுவிக்கொண்டார்.

கிறிஸ்துமஸ் நாளின்போதும் இதுபோன்ற நிகழ்வே நடந்தது. கிறிஸ்து பிறக்கும் வரைக்கும் இறைவனுடைய செய்தியை மக்கள், தீர்க்கதரிசிகள் என்னும் இறைத்தூதுவர்கள் வழியாக கேட்டுக்கொண்டிருந்தனர். இறைவனை குறித்து சங்கீதங்களை பாடிக்கொண்டிருந்தனர்.

இறைவனை எதிர்பார்த்து காத்திருந்த மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்படியாக, இறைவனே இந்த உலகத்திற்கு மனுக்குலத்தை தேடி அவர்கள் வாழ்வை சீரமைக்க வந்த நாள்தான் கிறிஸ்துமஸ்.

மீட்பை வழங்குபவர்

இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் பாவத்தின் வேர் இருக்கிறது. இதினிமித்தம் சாபம் ஒவ்வொரு மனிதனையும், மனுஷியையும் பின்பற்றி வருகிறது. அவர்கள் வாழ்வில் இருள் சூழ்ந்துகொள்கிறது.

இந்த இருளிலிருந்து என்னை விடுவிப்பவர் யார், என்று கலங்கும் மனுக்குலத்திற்கு ஓர் மீட்பை வழங்கக்கூடியவர் எல்லாம் வல்ல இறைவன் மட்டுமே.

ஏனென்றால், இவ்வுலகில் பிறக்கும் எந்த ஒரு மனிதனும் மற்ற ஒருவருக்கு மீட்பை வழங்க முடியாது. இவ்வுலகில் பிறந்திருக்கும் எல்லா மனிதர்களும் பாவிகளே என்று வேதம் கூறுகிறது.

இந்நிலையில் மனுக்குலத்தை பாவத்திலிருந்தும், அதனால் உண்டாகும் சாபத்திலிருந்தும் விடுதலை செய்ய, எல்லாம் வல்ல இறைவன் தம்முடைய தூய வித்தை ஒரு கன்னியின் கர்ப்பத்திலே விதைத்து, பாவமற்ற தூய இறை உருவம் கொண்ட பாலகனாக 'இயேசு' என்ற பெயரிலே, கிறிஸ்துமஸ் தினத்தன்று, 2022 வருடங்களுக்கு முன்பதாக பெத்லகேம் என்னும் சிற்றூரில் உதித்தார்.

புது வாழ்வு தருபவர்

அவர் ராஜ அரண்மனையில் பிறக்கவில்லை. அவருடைய தாய் தங்குவதற்குகூட இடம் இல்லாதபடியினால் ஒரு மாட்டுத் தொழுவத்தில், ஒதுங்கிய நிலையில், அந்த ஏழ்மையான நிலையில் அவரை பெற்றெடுத்தார்கள். கந்தை துணிகளினால் அவரை சுற்றியிருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது.

ஏனென்றால், அவர் இவ்வுலகிற்கு வந்ததின் நோக்கமே, தள்ளப்பட்ட நிலையில், நம்பிக்கை இல்லாமல், பெலன் இல்லாமல், இவ்வுலக இல்லாமையிலும், ஆன்மிக குறைவுகளினாலும் தவிப்போருக்கு, இறைவனுடைய துணையோடு புதுவாழ்வை அமைத்துக்கொடுக்க வழி செய்யவே வந்தார்.

ஆகவேதான் இயேசு, "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்" என்று சொன்னார்.

நட்சத்திரம்

இயேசு இந்த உலகத்தில் உதித்தபொழுது, யூதருக்கு ராஜாவாக பிறக்கும் அவருடைய நட்சத்திரம் வானத்தில் உதித்தது. அதை கிழக்கு திசையில் மூன்று ஞானியர் கண்டார்கள். அந்த நட்சத்திரத்தை அவர்கள் பின்தொடர்ந்து வந்தார்கள்.

அந்த நட்சத்திரம், இயேசு இருந்த இடத்திற்கு அவர்களை வழிநடத்திச் சென்றது. அங்கு அவரைக்கண்டு தொழுது கொண்டார்கள். பொன்னையும், தூப வர்க்கத்தையும், வெள்ளைப் போளத்தையும் காணிக்கையாக படைத்தார்கள்.

மெய்யாகவே அவர் ஏழை மக்களுக்கு மட்டுமல்ல, ஞானிகளுக்கும் ஞானத்தைப் போதித்து, அவர்கள் மூலம் உலக மக்களுடைய பிரச்சினைகளுக்கு மருத்துவ ரீதியிலும், ஆட்சி ரீதியிலும், உணவு உற்பத்தி செய்யும் ரீதியிலும், தொழில்நுட்ப ரீதியிலும், இன்னும் மற்ற விஞ்ஞான ரீதியிலும், சமூக சேவை என்ற ரீதியிலும் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்கும் இறை ஞானத்தை ஞானிகளுக்கு கொடுக்க வந்தார்.

நம் பொருளாலும், ஞானத்தினாலும் இவ்வுலகில் இருக்கும் எல்லோரையும் சுமக்க, இந்த கிறிஸ்துமஸ் நாளில் உதித்த எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள்புரிவாராக. அதுதான் மெய்யான கிறிஸ்துமஸ். இந்த கிறிஸ்துமஸ் நாளிலும் இறைவன் இயேசு வழங்க வந்த அத்தனை பாக்கியங்களும் உங்கள் மீது வருவதாக.

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

முனைவர் பால் தினகரன்.

Tags:    

Similar News