வழிபாடு

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திர திருவிழாநாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2023-03-26 09:01 GMT   |   Update On 2023-03-26 09:01 GMT
  • தேரோட்டம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது.
  • 6-ந் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 7 மணியளவில் அங்குள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெறுகிறது.

முக்கிய விழாவான தேரோட்டம் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு காலசந்தி பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. காலை 7.35 மணிக்கு சுவாமி வள்ளி-தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பின்னர் தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நிலையை வந்தடைந்த உடன் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இரவு 7 மணிக்கு கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, நடைபெறுகிறது. 6-ந் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தினமும் இரவு 7 மணிக்கு ஒவ்வொரு சமுதாயம் சார்பில் மண்டகப்படி திருவிழா நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News