வழிபாடு

தேர் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் தேர் சீரமைக்கும் பணி

Published On 2022-10-15 05:56 GMT   |   Update On 2022-10-15 05:56 GMT
  • கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 27-ந்தேதி தொடங்குகிறது.
  • மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி டிசம்பர் 6-ந்தேதி நடக்கிறது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை மாதத்தில் வரும் தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விழா 10 நாட்கள் நடைபெறும். இதில் 7-ம் நாள் விழாவின் போது தேரோட்டம் நடைபெறும். கொரோனா ஊரடங்கு காரணத்தினால் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டு அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் கார்த்திகை தீபத் திருவிழா மிக விமரிசையாக நடைபெறும் என பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் மாடவீதியில் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதியில் ராஜகோபுரம் எதிரே நிறுத்தப்பட்டுள்ள பஞ்சமூர்த்திகள் தேர்கள் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதலில் முருகர் தேரை தொடர்ந்து விநாயகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் சீரமைக்கும் பணிகள் அடுத்தடுத்து நடைபெற உள்ளது.

Tags:    

Similar News