மயிலாடியில் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமிக்கு நாளை ஆராட்டு விழா
- நாளை மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடி புத்தனாறு கால்வாயில் ஆராட்டு நடக்கிறது.
- மயிலாடி சுற்றுவட்டார ஊர் மக்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடி புத்தனாறு கால்வாயில் ஆராட்டு விழா நாளை (வியாழக்கிழமை) மாலை நடக்கிறது. இதை முன்னிட்டு மயிலாடி ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை சார்பில் 37-வது ஆண்டு இலக்கிய விழா நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. விழாவில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
விழாவிற்கு ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார். செயற்குழு உறுப்பினர் சுதாகர் வரவேற்று பேசுகிறார். ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை பொதுச் செயலாளர் நாகராஜன், பொருளாளர் சுடலையாண்டி, மயிலாடி பேரூராட்சி தலைவி விஜயலட்சுமி பாபு, தொழில் அதிபர் ராஜா, ஆராட்டு விழா கலை இலக்கிய பேரவை துணைத்தலைவர் ராஜு, லிங்கேஸ்வரன், கோபாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் கிஷோர், ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
தொடர்ந்து மயிலாடி சுற்றுவட்டார ஊர் மக்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை மாலை 5.30 மணிக்கு ஆன்மிக அருளுரை, 6.30 மணிக்கு மருங்கூர் சுப்பிரமணியசாமிக்கு மயிலாடி புத்தனாறு கால்வாயில் ஆராட்டு நடக்கிறது. இரவு 7 மணிக்கு வேடமிட்ட வினோத விசாரணை மன்றம் நடக்கிறது. இதில் நீலம் மதுமையன் நடுவராய் இருக்கிறார்.
4-ந் தேதி காலை 10 மணிக்கு மயிலாடி சுற்றுவட்டார பள்ளி, கல்லூரி மாணவிகள் நடத்தும் விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு இன்னிசை நகைச்சுவை பட்டிமன்றம் நடக்கிறது. இதில் வாசுகி மனோகர் நடுவரா இருக்கிறார்.
5-ந் தேதி இரவு 7 மணிக்கு ஞானசம்பந்தம் நடுவராகக் கொண்டு பட்டிமன்றம் நடக்கிறது. நிகழ்ச்சியை கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமார் தொடங்கி வைத்து பேசுகிறார். மேலும் இவர் 6-ந் தேதி இரவு நடைபெறும் டி.வி. பிரபலங்கள் பங்கேற்கும் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.