வழிபாடு

மேல்மருவத்தூரில் மே 5-ந்தேதி 1008 யாக குண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூஜை

Published On 2023-04-27 07:01 GMT   |   Update On 2023-04-27 07:01 GMT
  • 4-ந்தேதி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும்.
  • ஆன்மிக குரு பங்காரு அடிகளார் 1008 கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கி வைக்க உள்ளார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நேற்று முக்கோணம், சதுரம், சாய் சதுரம், ஐங்கோணம், அறு கோணம், எண் கோணம், வட்டம், சூலம் ஆகிய வடிவங்களை உள்ளடக்கிய யாக குண்டங்கள் அமைப்பதற்காக குருபூஜை நடைபெற்றது.

அதில் குரு போற்றி, விநாயகர் போற்றி, சக்தி மந்திரங்கள் படிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து 1008 யாக குண்டங்கள் அமைக்கும் பணியில் ஆயிரக்கணக்கான செவ்வாடை தொண்டர்கள் பணி செய்து தொண்டாற்றி வருகின்றனர்.

இந்த சித்திரை பவுர்ணமி வேள்வி பூஜையானது மே 4-ந்தேதி காலை 3 மணி அளவில் மங்கள இசையுடன் தொடங்கி ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் பங்காரு அடிகளாருக்கு தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்ட மன்றங்களின் பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்பு அளிக்க உள்ளனர்.

மே 5-ந்தேதி சித்ரா பௌர்ணமி அன்று மாலை 5 மணி அளவில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உலக நன்மைக்காக 1008 கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கி வைக்க உள்ளார். நிகழ்ச்சியில் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர்கள் செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், வாசன், ஜெயராமன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News