அறுபடை அழகன்..! 3-ம் படை முதல்வன்..!
- முத்தமிழின் முதல்வன் முருகப்பெருமான்.
- முருகன், தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுகிறான்.
"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி" என்ற சிறப்பு பெற்றது தமிழினம். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கலைகளை வளர்த்தவர்கள், பண்பாட்டை கொடுத்தவர்கள். காதல், வீரம் இரண்டையும் கண்களாக போற்றி மண்ணின் பெருமையை காத்தவர்கள். இந்த சிறப்பு பெற்ற தமிழர்களின் வழிபாட்டு கடவுளாக இருப்பவன் அறுபடை அழகன், முத்தமிழின் முதல்வன் முருகப்பெருமான். இந்து சமயத்தின் உருவ கடவுள்களுள் ஒருவனாக திகழ்ந்தாலும், அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே. இதனால் முருகன், தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுகிறான்.
நம் நாட்டில் எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்திருக்கின்றன. தமிழகத்தை பிற சமயத்தினர் ஆட்சி செய்திருக்கின்றனர். பிற மதத்தினர் நம் தமிழக வளங்களை கொள்ளை அடித்திருக்கின்றனர். அரசர்களின் ஆட்சி, அந்நியர் ஆட்சி என அரசுகள் பலவாறு மாறி இருக்கின்றன. ஆனால் தெய்வ வழிபாடு எவ்வித மாற்றமும் பெறவில்லை. இன்றைக்கு எத்தனை விஞ்ஞான முன்னேற்றமும், வளர்ச்சிகளும் வந்த பிறகும் கூட ஆன்மிகம் தனது வேரை ஆழமாக பரப்பி இருக்கிறது.
புராணங்கள் முருகப்பெருமானை சிவனின் மகனாக உரைக்கின்றன. அதன்படி சிவனிடம் இருந்து புறப்பட்ட தீப்பொறி சரவண பொய்கையில் 6 பகுதிகளாக விழ, அப்பொறிகளானது குழந்தை வடிவம் ஏற்கிறது. 6 கார்த்திகை பெண்களால் ஆறு குழந்தைகளும் வளர்க்கப்படுகின்றன. பின்னர் கார்த்திகை திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை திருநாளே முருகப்பெருமானின் விசேஷ தினமாக கொண்டாடப்படுகிறது.
அதேபோல் வைகாசி மாத விசாக நட்சத்திர தினம், முருகப்பெருமானது ஜென்ம நட்சத்திர தினம். இந்த தினத்தை பக்தர்கள் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். முருகப்பெருமான் குடிகொண்ட கோவில்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் அறுபடை வீடுகளுக்கு தனிச்சிறப்பு உண்டு. ஏனெனில் அந்த அறுபடை வீடுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு முதல்வனாக காட்சி தந்து அருள்பாலிக்கிறான்.