வழிபாடு

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் கலிவேட்டை-தேரோட்டம்

Published On 2024-06-01 02:50 GMT   |   Update On 2024-06-01 02:50 GMT
  • வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் வைகாசி திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு வாகன பவனியும், அதனைத் தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறுகிறது.

விழாவின் 8-வது நாளான நேற்று கலிவேட்டை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு பழங்கள், மலர் அலங்காரத்துடன் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை நடந்தது. 5 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வெள்ளை குதிரை வாகனம் தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து முத்திரி கிணற்றங்கரையை அடைந்தது.

அங்கு குரு சுவாமி தலைமையில் அய்யா வழி பக்தர்களின் 'அய்யா சிவ சிவா அரகரா அரகரா' என்ற பக்தி கோஷத்திற்கு இடையே அய்யா கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் குமரி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் குதிரை வாகனம் செட்டிவிளை, சாஸ்தான் கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக வந்தது. வாகனம் வரும் வழிகளில் அந்த பகுதி மக்கள் வரவேற்பு கொடுத்து, வெற்றிலை, பாக்கு, பழங்கள், பன்னீர் ஆகியவற்றை சுருளாக படைத்து வழிபட்டனர்.

இரவு 11 மணிக்கு வாகனம் சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. அங்கு வடக்கு வாசலில் பக்தர்களுக்கு தவக்கோலத்தில் அய்யா வைகுண்டசாமி காட்சியளித்தார். தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும், பெரிய உகப்படிப்பும், அன்னதர்மமும் நடந்தது.

விழாவில் இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு இந்திர வாகன பவனியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 

Tags:    

Similar News