ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மாட வீதிகளில் ஆண்டாள் வீதி உலா
- வருகிற 15-ந்தேதி வரை ஆண்டாள் வீதி உலா நடை பெறுகிறது
- பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி கடந்த 17-ந் தேதி முதல் வருகிற 15-ந் தேதி வரை மனோன்மணி (ஆண்டாள்) வீதி உலா நடை பெறுகிறது. 4-வது நாளான நேற்று காலை உற்சவர் ஆண்டாளுக்கு பல்வேறு நறுமண மலர்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தி, நெய் வேத்தியங்களை கோவில் வேத பண்டிதர்கள் சமர்ப்பித்தனர். தொடர்ந்து கோவில் அலங்கார மண்டபத்தில் இருந்து மேளதாளங்கள், மங்கள வாத்தியங்களுடன் வேத பண்டிதர்களால் வேத மந்திரங்கள் முழங்க ஆண்டாள் வீதி உலா தொடங்கியது.
நான்கு மாட வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். கோவில் ஆய்வாளர்கள் சுரேஷ் ரெட்டி, பத்ரய்யா மற்றும் அதிகாரிகள் ஜெகதீஷ் ரெட்டி, சுரேஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.