வழிபாடு

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் தங்க நாகப்படகுகளை ராகு-கேது பூஜைக்கு பயன்படுத்த ஏற்பாடு

Published On 2022-08-30 05:33 GMT   |   Update On 2022-08-30 05:33 GMT
  • தங்க நாகப்படகுகளை வைத்து ராகு-கேது பூஜை செய்ய ரூ.10 ஆயிரம் வரை கட்டணம்.
  • பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு கூட்டம் சிவன் கோவில் வளாகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு தலைமை தாங்கினார். முக்கிய விருந்தினராக ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ. பியப்பு.மதுசூதனரெட்டி பங்கேற்றார்.

கூட்டத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் முதல் கோவிலில் நிலுவையில் உள்ள தங்கத்தைப் பயன்படுத்தி தங்க நாகப்படகுகளை தயாரித்து ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜைக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது. தங்க நாகப்படகுகளை பயன்படுத்தி ராகு-கேது பூஜை செய்ய ஒரு பூஜைக்கு ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் துணைக் கோவில்களான அர்த்தநாரீஸ்வரர் கோவில், அகஸ்தீஸ்வரர் கோவில், அன்னப்பூர்னேஸ்வரர் கோவில்களின் மகா கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். ஆன்மிக தலமான ஸ்ரீகாளஹஸ்தி தொகுதியில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயங்களை புனரமைக்க வேண்டும்.

புதிதாக சிவன் கோவில்களை கட்ட வேண்டும். அதற்காக ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தானம் சார்பில் ரூ.5 லட்சம் வரை பண உதவி வழங்க வேண்டும். இதற்காக, அறநிலையத்துறையிடம் இருந்து அனுமதி வந்ததும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தர்மராஜா கோவில் வளாகத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வரதராஜ பெருமாள் கோவில் விடுதியை சீரமைக்க வேண்டும். முத்தியாலம்மன் கோவில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தை புனரமைக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

சிவன் கோவிலில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கோவில் நிர்வாக அதிகாரி சாகர்பாபு, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் பிற துறை அதிகாரிகள், வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News