வழிபாடு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று நம்பெருமாள் தீர்த்தவாரி

Published On 2023-01-11 08:23 GMT   |   Update On 2023-01-11 08:23 GMT
  • நாளை நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.
  • 13-ந்தேதி வரை இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. ராப்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான இன்று நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு பரமபதவாசல் வழியாக காலை 10.30 மணிக்கு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரர் உடன் வந்தடைவார்.

அங்கு காலை 11 மணிக்கு நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராடுவார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தபேரர் தீர்த்தவாரியை (நீராடுவதை) கண்டருளுவார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்வர். பின்னர் சந்திரபுஷ்கரணியில் உள்ள நீரை தீர்த்தமாக அனைத்து பக்தர்கள் மீதும் தெளிக்கப்படும். தீர்த்தவாரிக்கு பின் தீர்த்தபேரர் பரமபதவாசல் வழியாக மூலஸ்தானம் சென்றடைவார்.

நம்பெருமாளர் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்திற்கு மதியம் 1 மணிக்கு சென்றடைவார். அங்கு மதியம் 1.30 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுஜன சேவை நடைபெறும். பின்னர் மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணிவரை பொதுஜனசேவையுடன் நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுவார்.

இரவு 11 மணிமுதல் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 3 மணிவரை அரையர் சேவையுடன் திருப்பாவாடை கோஷ்டி நடைபெறும். அதிகாலை 4 மணிமுதல் காலை6 மணிவரை பொதுஜன சேவையும், காலை 6 மணிமுதல் 7 மணி வரை நம்மாழ்வார் மோட்சம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணி முதல் காலை9 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன், பொதுஜன சேவை நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் இரவு 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் அதிகாலை (13-ந்தேதி) 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது.

அதன் பின் அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் அதிகாலை5 மணிவரை சாற்றுமறை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News