வழிபாடு

நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளிய போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கத்தில் இன்று தெப்பத்திருவிழா:நம்பெருமாள் நெல்லளவு கண்டருளினார்

Published On 2023-03-02 05:23 GMT   |   Update On 2023-03-02 05:23 GMT
  • தெப்ப உற்சவம் இன்று மாலை நடைபெறுகிறது.
  • பகல் 3 மணி முதல் மாலை 5 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

7-ம் நாளான நேற்று மாலை 6.30 மணி அளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு வந்தார். பின்னர் அவர் நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 9-ம் திருநாளான 3-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 3 மணி முதல் மாலை 5 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News