வழிபாடு

தைப்பூச திருவிழா இன்று தொடக்கம்: பழனிக்கு படையெடுக்கும் பாதயாத்திரை பக்தர்கள்

Published On 2023-01-29 05:31 GMT   |   Update On 2023-01-29 05:31 GMT
  • கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
  • பழனிக்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்தநிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச திருவிழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவது வழக்கம். அதன்படி, ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதற்கிடையே கும்பாபிஷேகத்தையொட்டி மூலவர் தரிசனம் இல்லை என்பதால் பக்தர்கள் வருகை குறைந்தது.

இந்தநிலையில் கும்பாபிஷேகம் முடிந்ததாலும், தைப்பூச திருவிழா தொடங்க உள்ளதாலும் தற்போது பழனிக்கு மீண்டும் பக்தர்கள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றனர். அதன்படி, நேற்று பழனிக்கு ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். குறிப்பாக கோவை, சேலம், திருப்பூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு அதிக அளவில் வந்தனர். அதேபோல் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்தனர்.

அவ்வாறு வந்த பக்தர்களில் ஏராளமானோர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து முருகப்பெருமானை வழிபட்டனர். முன்னதாக கிரிவீதி, வெளிப்பிரகாரத்தில் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் ஒரே வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News