திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா தொடங்கியது
- 18-ந்தேதி திருமஞ்சனம், கருடசேவை நடக்கிறது.
- 19-ந்தேதி தீர்த்தவாரி, திருக்கல்யாணம் நடக்கிறது.
காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவிலைச் சேர்ந்த நளபுரநாயகி நளநாராயணப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியார் நளநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிகம்பம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கொடிக்கம்பத்தில் கருடக்கொடியேற்றப்பட்டது. பின்னர், சாமிக்கும் கொடி கம்பத்துக்கும் சிறப்பு ஆராதனை நடந்தது.
நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை சூரிய பிரபையில் வேணுகோபாலராக பெருமாள் வீதியுலா புறப்பாடு நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை பெருமாளுக்கு திருமஞ்சனமும் ஹம்ச வாகனத்தில் நாச்சியார் கோலத்தில் வீதிஉலா புறப்பாடும் நடக்கிறது.
18-ந் தேதி(சனிக்கிழமை) காலை திருமஞ்சனமும், மாலை கருடசேவையாகவும் பெருமாள் புறப்பாடும் நடக்கிறது. 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நளதீர்த்தத்தில் தீர்த்தவாரியும் மதியம் திருக்கல்யாணமும் நடக்கிறது.