திருநறையூர் ராமநாதசுவாமி கோவிலில் குடமுழுக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது
- வருகிற 24-ந்தேதி குடமுழுக்கு நடக்கிறது.
- நாளை முதல் கால யாக பூஜை தொடங்கி 24-ந்தேதி அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருநறையூரில் ராமநாதசாமி கோவில் உள்ளது. தசரத மன்னன் வழிபட்ட தலமான இங்கு சனி பகவான் மந்தாதேவி ஜேஸ்ட்டா தேவி சமேதராய் காட்சியளிக்கிறார். இங்கு கடந்த 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு பல லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகிற 24-ந்தேதி குடமுழுக்கு நடக்கிறது.
விழாவையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. நாளை(புதன்கிழமை) முதல் கால யாக பூஜை தொடங்கி வருகிற 24-ந்தேதி அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. காலை 6.50 மணிக்கு விமான குடமுழுக்கும், தொடர்ந்து மூலவர்கள் குடமுழுக்கும் நடைபெறுகிறது.
இரவு 7 மணிக்கு சுவாமிகள் வீதி உலா நடக்கிறது. சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் மனோஜ், ஞானசேகர் மற்றும் சிவாச்சாரியார்கள் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பிரபாகரன், தக்கார் அருணா மற்றும் கோவில் பணியாளர்கள், திருநறையூர் மக்கள் மன்றத்தினர் செய்து வருகின்றனர்.