திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- 3-ந்தேதி 5 திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
- 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி நேற்று மகாலிங்க சுவாமி கோவிலில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக விநாயகர், முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர் உற்சவர்கள் சிறப்பு மலர் அலங்காரத்தில் கோவிலின் பிரதான கொடி மரத்திற்கு அருகில் எழுந்தருளினர்.
பின்னர் ரிஷப வாகனம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை வேலப்ப தேசிக தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 30-ந்தேதி சகோபர இடபக்காட்சியும், பிப்ரவரி 3-ந்தேதி 5 திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும், 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி உற்சவமும், வெள்ளிரத காட்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் ஸ்ரீராம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.