தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 25-ந் தேதி தொடங்குகிறது
- கந்தசஷ்டி விழா வருகிற 25-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது
- விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, அன்னதானம் நடைபெறும்.
தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா வருகிற 25-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. முதல்நாள் காலையில் கணபதி ஹோமம், 10 மணிக்கு செக்கர்கிரி வேலவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை, 12.30 மணிக்கு காப்புகட்டுதல், அன்னதானம் போன்றவை நடக்கிறது. தொடர்ந்து வரும் விழா நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை, பக்தி பஜனை, அன்னதானம் போன்றவை நடைபெறும்.
30-ந் தேதி காலை 9.30 மணிக்கு வேலவன் செக்கர்கிரி மலையில் இருந்து பல்லக்கில் எழுந்தருளல், மாலை 4 மணிக்கு செக்கர் கிரி வேலவன் போர்க்கோலமுருகனாக குதிரை வாகனத்தில் சூரசம்ஹாரத்தில் எழுந்தருளல், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம், பின்னர் சிறப்பு வாணவேடிக்கை ஆகியவை நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெற்றிவேலவன் மயில்வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.
31-ந் தேதி காலை 9 மணிக்கு செக்கர்கிரி வேலவன் ஆராட்டுக்கு எழுந்தருளல், 10 மணிக்கு அபிஷேகங்கள், 11 மணிக்கு செக்கர் கிரி வேலவன் பச்சை சாத்தி எழுந்தருளல், தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தோவாளை செக்கர் கிரிசுப்பிரமணியசாமி கோவில் நிர்வாககுழு மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.