திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு
- கந்தசஷ்டி திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது.
- சூரசம்ஹாரம் 30-ந்தேதி நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.
இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 30-ந் தேதி நடக்கிறது. அன்று திருச்செந்தூருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வருவார்கள்.
இதையடுத்து, திருச்செந்தூரில் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையிலும், பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஸ் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள ஜெ.ஜெ. நகர் பகுதி, நெல்லை ரோட்டில் உள்ள செந்தூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் அருகில் உள்ள காலி இடம், கோவில் வளாகத்தில் உள்ள நாழிக்கிணறு கார் பார்க்கிங், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதி மற்றும் கலையரங்கம் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், ரகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.