கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து.. இறுதிப் போட்டிக்கு முன்னேறியது அர்ஜென்டினா

Published On 2024-07-10 02:50 GMT   |   Update On 2024-07-10 02:50 GMT
  • கனடா அணி பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டியது.
  • கோபா அமெரிக்கா 2024 தொடரில் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார்.

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் துவங்கிய இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அர்ஜென்டினா, கனடா, உருகுவே மற்றும் கொலம்பியா என நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இதனிடையே கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கனடா அணிகள் மோதின. பரபரப்பாக துவங்கிய இந்த போட்டியின் 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா தனது முதல் கோலை அடித்தது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

மறுபுறம் கனடா அணி பதில் கோல் அடிக்கும் முனைப்பில் தீவிரம் காட்டியது. எனினும், முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதியில் மற்றொரு கோல் அடிக்கும் முயறச்சியில் அர்ஜென்டினா அணியும், பதில் கோல் அடிக்க கனடா அணி வீரர்களும் முயற்சித்தனர்.

அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி போட்டியின் 51-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 2-0 என்று முன்னிலை பெற்றது. கோபா அமெரிக்கா 2024 தொடரில் மெஸ்ஸி அடித்த முதல் கோல் அந்த அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியது.

போட்டி முடிவில் கனடா வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

முதல் அரையிறுதி போட்டியில் தோல்வியை தழுவிய கனடா அணி இந்த தொடரில் தனது கடைசி போட்டியை ஜூலை 14 ஆம் தேதி விளையாடுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கோபா அமெரிக்கா 2024 கால்பந்து தொடரில் மூன்றாவது இடத்தை பிடிக்க முடியும்.

நாளை நடைபெற இருக்கும் 2-வது அரையிறுதி போட்டியில் உருகுவே மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். தோல்வியை தழுவும் அணி ஜூலை 14 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் கனடா அணியை எதிர்கொள்ளும். 

Tags:    

Similar News