பொது மருத்துவம்

கிட்னி செயலிழப்புக்கான ஆரம்பநிலை அறிகுறிகள்!

Published On 2024-09-17 07:04 GMT   |   Update On 2024-09-17 07:04 GMT
  • 14 சதவீதம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயுடன் வாழ்கின்றனர்.
  • போதிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் இல்லை.

உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 14 சதவீதம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயுடன் வாழ்கின்றனர். சிறுநீரக நோய் அறிகுறிகளைப் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் இன்னும் இல்லை.

காரணங்கள்

கட்டுப்பாடில்லாத நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்துகள் நாட்பட சாப்பிடுவது, தொடர் சிறுநீரக தொற்றுக்கள், சிறுநீரக நீர்க்கட்டி நோய், தொடர் சிறுநீரக கற்கள் போன்றவை.

அறிகுறிகள்

1) சிறுநீரக நோயின் முதல் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக ஆழ்ந்த சோர்வு, பலகீனம், புத்திக் கூர்மை குறைதல் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுநீரகங்கள் அவற்றின் அன்றாட வேலை செய்யும் திறனை நிறுத்தும் போது, உடலில் நச்சுகள் மற்றும் கழிவுகள் உருவாகும். இந்த அசுத்தங்கள் எளிதில் உடலை சோர்வடையச் செய்யும்.

2) தூங்குவதில் சிரமம் ஏற்படும். நாள்பட்ட சிறுநீரக நோயுடன் வாழும் நோயாளிகள் பல்வேறு தூக்கக் கோளாறுகளை அனுபவிக்கின்றனர்.

3) சிறுநீரகத்தின் வடிகட்டிகள் (நெப்ரான்கள்) சேதமடைவதால், குறிப்பாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

4) சிறுநீருடன் ரத்தம் கலந்து காணப்படும்.

5) வீங்கிய பாதங்கள் மற்றும் கணுக்கால்.

6) பசியின்மை, குமட்டல், வாந்தி உணர்வுகள்,

7) தோல் வறட்சி மற்றும் அரிப்பு,

8) சிறுநீரில் நுரை, குமிழிகள் காணப்படுதல்,

9) தசை சோர்வு, தசைப்பிடிப்பு,

10) கண்களின் கீழ் வீக்கம்.

11) முதுகுவலி.

நோய் கண்டறிய உதவும் பரிசோதனைகள்

ரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், பொட்டாசியம், சோடியம் பை கார்பனேட், சோடியம், குளோரைடு, இ.ஜி.எப்.ஆர் மற்றும் சிஸ்டேட்டின் சி, சிறுநீரில் மைக்ரோஆல்புமின் அளவுகளை பரிசோதித்து நோயின் தன்மையை அறியலாம்.

மருத்துவ ஆலோசனை மற்றும் சித்த மருத்துவம்

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய்க்குரிய காரணத்தை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை எடுக்க வேண்டும். உணவில் உப்பு குறைந்த அளவில் எடுக்க வேண்டும்.

உப்பில் ஊறவைத்த பொருட்களை தவிர்க்க வேண்டும். அசைவ உணவு எடுப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைபடி அளவுடன் சாப்பிட வேண்டும், அல்லது தவிர்க்க வேண்டும்.

சித்த மருத்துவத்தில் மூக்கிரட்டை, பூனைமீசையிலை, நெருஞ்சில் இவைகளை பொடித்து வைத்ததில் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை குடித்து வர வேண்டும். இதனால் யூரியா, கிரியாட்டினின் அளவு குறையும்.

மேலும், வறுத்த சீரகம் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து தொடர்ந்து குடித்து வர வேண்டும். இது சிறுநீரக செயல்பாட்டிற்கு நல்லது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தான் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News