பொது மருத்துவம்

குரங்கம்மை: அச்சுறுத்தல்களும்.. அபாயங்களும்..!

Published On 2024-08-25 08:35 GMT   |   Update On 2024-08-25 08:35 GMT
  • குரங்கம்மை பொதுமக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
  • குரங்கம்மை நோய் எப்படி பரவும்?

'மங்கி பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை நோய் உலகளவில் வேகமாக பரவி, பொதுமக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

விமானத்தில் பயணிப்பவர்கள் மூலம் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு எளிதாக ஊடுருவி விடுவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பும், கடும் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நோய் பற்றியும், அதன் தன்மை குறித்தும், அது ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள், மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஒருவருக்கு குரங்கம்மை நோய் எப்படி பரவும்?

முக்கியமாக விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. அதேவேளையில் ஒரு மனிதனிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுவதும் சாத்தியம். குறிப்பாக பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றொருவருக்கு நெருங்கிய தொடர்பு மூலமாகவும், சுவாசத் துளிகள் மூலமாகவும் பரவக்கூடும்.

விலங்குகளின் மூலம் பரவுவதை பொறுத்தவரை குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள விலங்குடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலமாகவும், அந்நோய் பாதிப்புக்குள்ளான விலங்குகளின் இறைச்சியை உண்பதன் மூலமாகவும் பரவும்.

மனிதர்களை பொறுத்தவரை குரங்கம்மை பாதிக்கப்பட்டவருடன் உடல் ரீதியாக நெருங்கிய தொடர்பில் இருப்பது, அவர்களின் உடைகள், படுக்கை அறை, துண்டு போன்றவற்றை உபயோகிப்பது மூலம் பரவும்.

உமிழ்நீர், சுவாச துளிகள் (தும்மல், இருமல்) மூலமும், கருவில் வளரும் குழந்தைக்கு தாயின் நஞ்சுக்கொடி மூலமும் எளிதில் பரவக்கூடும்.


குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி உள்ளதா?

சின்னம்மை ஒழிப்பு திட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை இந்த நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள பயன்படுத்தலாம். இருப்பினும், 1980-ம் ஆண்டுக்கு உலக அளவில் சின்னம்மை ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசி எதுவும் தயாரிக்கப்படவில்லை.

ஜென்னோஸ்டம் என்ற பெயருடைய தடுப்பூசியை குரங்கு அம்மை, சின்னம்மை நோய்க்கு பயன்படுத்த அமெரிக்கா உரிமம் பெற்றுள்ளது.

குழந்தைகளுக்கு இந்த நோய் எளிதில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விழிப்புணர்வுடன் தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியமானது.


குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன?

காய்ச்சல், முகம், கைகள், கால்கள், கண்கள், வாய் அல்லது பிறப்புறுப்புகளில் கொப்புளங்களுடன் கூடிய கடுமையான தோல் வெடிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை முக்கியமான அறிகுறிகள்.

காய்ச்சல் ஏற்பட்ட முதல் 3 நாட்களுக்குள் சொறி உணர்வு ஏற்படலாம். முதலில் வாய், நாக்கு பகுதியில் புண்கள் தோன்றும். பின்பு முகத்தில் சொறி உணர்வு தோன்றி 24 மணி நேரத்திற்குள் கைகள், கால்கள் என உடலில் மற்ற பகுதிகளுக்கு பரவி கொப்புளங்களாக மாறும்.

4, 5-வது நாளில், கொப்புளங்கள் பெரிதாகிவிடும். 2-வது வார முடிவில், அவை உலர்ந்து விடும். இதனுடன் தொடர்புடைய மற்ற சில அறிகுறிகள்: ஆஸ்தீனியா (கடுமையான உடல் பலவீனம்), தலைவலி, தசை வலி, உடல் வலி, முதுகுவலி, தொண்டை புண், இருமல், வியர்வை, உடல் குளிர்ச்சி.

சின்னம்மை போன்றது தானா?

குரங்கம்மையும் சின்னம்மையை போன்றே போக்ஸ்விரிடே குடும்பத்தை சேர்ந்தது. நோய் அறிகுறிகளும் கிட்டத்தட்ட சின்னம்மை போலவே இருக்கும். ஆனால் கூடுதலாக நிணநீர் அழற்சியையும் (நிணநீர் கணுக்களில் வீக்கம்) ஏற்படுத்தும்.

சின்னம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த அறிகுறி ஏற்படாது. அத்துடன் சின்னம்மையுடன் ஒப்பிடும்போது இறப்புக்கு வழிவகுக்கும் அச்சுறுத்தலையும் குரங்கம்மை நோய் கொண்டிருக்கிறது.

மறுபுறம் சின்னம்மையை பொறுத்தவரை விரிசெல்லா-ஜோஸ்வர் வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இருப்பினும் சின்னம்மை, குரங்கம்மை இவை இரண்டும் சுவாசம் மற்றும் தோல் தொடர்பு மூலம் பரவுகின்றன.


குரங்கம்மை என்றால் என்ன?

இது வைரஸ் ஜூனோடிக் நோயாகும். அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்தொற்று.

இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?

கேரளாவில் மார்ச் மாதத்தில் முதல் நோய்த்தொற்று பதிவானது. சுமார் 30 பேர் இந்த நோய் தொற்று அறிகுறிகளுக்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் குரங்கம்மை வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான அபாயம் குறைவாக இருப்பதாகவும், பீதி அடைய தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

குரங்கம்மையை எவ்வாறு தடுப்பது?

* அறிகுறிகள் தென்பட்டால் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும். உடனே மருத்துவரை அணுகவும்.

* நோய் பாதிப்புக்குள்ளான அல்லது சந்தேகிக்கப்படும் நபருடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.

* நோயாளியுடன் தொடர்பில் இருக்கும் படுக்கை, பாத்திரங்கள் போன்ற எந்தவொரு பொருளையும் தொடுவதை தவிர்க்கவும்.

* கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* பாதிக்கப்பட்ட நபரின் கொப்புளத்தைத் தொடுவதை தவிர்க்கவும்.

முதல் நோய்த்தொற்று எப்போது உறுதிபடுத்தப்பட்டது?

1970-ம் ஆண்டு காங்கோ நாட்டில் ஒரு குழந்தை இந்த நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அந்த குழந்தைக்கு பெரியம்மை தொற்று இருப்பதாகவே சந்தேகிக்கப்பட்டது.

தொடர் பரிசோதனையின் முடிவில் குரங்கம்மை தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. குரங்குகளை தவிர அணில், அந்நாட்டை சேர்ந்த ஒரு வகை எலி, டார்மிஸ் போன்ற விலங்குகள் மூலமும் இந்த வைரஸ் தொற்று பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் கொடியதா?

குரங்கு அம்மை அறிகுறிகள் சில வாரங்களுக்குள் தானாகவே மறைந்துவிடும். ஆனால் சிலருக்கு இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளான நிமோனியா, மூளை அழற்சி, கண் நோய்த்தொற்றுகள் (பார்வை இழப்புக்கு வழிவகுக்கக்கூடும்) மற்றும் மரணம் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே ஆரம்ப நிலையிலேயே முறையான சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியமானது.

குரங்குகளால் இந்த நோய் பரவுகிறதா?

1958-ம் ஆண்டு, சிங்கப்பூரில் இருந்து டென்மார்க் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட குரங்குகள் நோய் பாதிப்புக்குள்ளாகி, இந்த நோய் பரவியது. எனவே `குரங்கம்மை' என்று அழைக்கப்படுகிறது.

Tags:    

Similar News