பொது மருத்துவம்

மன அழுத்தத்தில் இருந்து விடுபட உண்ண வேண்டியவை

Published On 2024-09-09 03:43 GMT   |   Update On 2024-09-09 03:43 GMT
  • இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பால் பருகுவதும் நல்லது.
  • மன அழுத்தத்தில் இருக்கும்போது பெர்ரி வகை பழங்களை உட்கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் தவிர்க்க முடியாத தொற்று வியாதியாக பலரையும் ஆட்கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் உட்கொள்ளும் உணவு தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.


இல்லாவிட்டால் மன அழுத்தத்தை கூடுதலாக தூண்டி பாதிப்பை அதிகரிக்கச் செய்துவிடும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


மன அழுத்தத்தில் இருக்கும்போது பெர்ரி வகை பழங்களை உட்கொள்ளலாம். ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்த அவை, செல்கள் சேதம் அடைவதை தடுக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் துத்தநாகத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. உடலில் துத்தநாகம் குறைவாக இருந்தால் மன அழுத்த பாதிப்பு அதிகமாகிவிடும்.

முந்திரி பருப்பில் 14 முதல் 20 சதவீதம் வரை துத்தநாகம் இருக்கிறது. அதனை உட்கொள்வது துத்தநாக குறைபாட்டை ஈடு செய்து மன அழுத்தத்தையும், கவலையையும் குறைக்க உதவும்.


மெக்னீசியமும் மனநிலையை மேம்படுத்துவதற்கு வழிவகை செய்யும். சியா விதைகள், பூசணி விதைகள் மற்றும் முட்டையில் மெக்னீசியம் உள்ளது. இவை மனநிலை முன்னேற்றத்துக்கும் வித்திடும்.


அவகேடோவிலும் மன அழுத்தத்தை எதிர்த்து போராடும் சேர்மங்கள் இருக்கின்றன. குறிப்பாக ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் சி, பி6 ஆகியவை உள்ளடக்கி இருக்கின்றன. அவை மனஅழுத்தத்தையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவிடும்.

கீரைகளையும் உட்கொள்ளலாம். அதில் இருக்கும் போலேட்டுகள் பதற்றத்தை தணிக்க உதவும். சால்மன், மத்தி போன்ற மீன் வகைகளையும் உட்கொள்ளலாம். அதில் இருக்கும் வைட்டமின் டி, பதற்றம் மற்றும் மனநல கோளாறுகளை தணிக்கும்.

இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பால் பருகுவதும் நல்லது. பாலில் இருக்கும் டிரிப்டோபன், மெலடோனின் மற்றும் பி-வைட்டமின்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தை தூண்டிவிடும்.

Tags:    

Similar News