சமையல்

புதிதாக சமையல் கற்பவர்களுக்கான டிப்ஸ்.... முயற்சி செய்து பாருங்கள்!

Published On 2024-09-22 03:00 GMT   |   Update On 2024-09-22 03:00 GMT
  • தோசைக்கு அரைக்கும் மாவில் சிறிது கொள்ளை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும்.
  • டால்டா, நெய் கெட்டியாகிவிட்டால் ஸ்பூனை சூடாக்கி கலந்தால் சுலபமாக வரும்.

* இட்லி மாவு நீர்த்துப் போய்விட்டால் அதில் எண்ணெய் இல்லாமல் வறுத்த ரவையை சிறிது கலந்து அரை மணி நேரம் ஊறிய பிறகு இட்லி வார்த்தால் சுவையாக இருக்கும்.

* ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து மோரில் கலக்கி பச்சை மிளகாய்களை ஊற வைத்து பின்னர் காயப்போட்டால் மிளகாய் வற்றல் பார்க்க வெண்மையாகவும், அதிக ருசியாகவும் இருக்கும்.

* இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்துக்கொண்டால் இடியாப்பம் பிழிவது சுலபமாக இருக்கும்.

* வத்தக்குழம்பு தாளிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலையும் சேர்த்துக் கொண்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.

* கொள்ளு பயிறை காலையில் ஊற வைத்து மாலையில் தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள் உலர்த்த வேண்டும். உலர்ந்த பின் தேய்த்தால் பருப்பு கிடைக்கும். இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.

* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில் கொள்ளு பருப்பை சேர்த்து அரைத்து செய்தால் தோசை பூப்போல மிருதுவாக இருக்கும்.

* ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து, ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.

* பஜ்ஜி செய்யும் போது கடலை மாவு, அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்தால் பஜ்ஜியின் சுவையே அலாதி.

* அடை மாவுடன் கார்ன் பிளேக்சை பொடித்து சேர்த்து அடை சுட்டால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் தயார் செய்யும்போது கொஞ்சம் பொட்டுக்கடலையை வறுத்துக்கொட்டினால் சுவையாக இருக்கும்.

* பால் உறைக்கு ஊற்றும்போது வெதுவெதுப்பாக இருந்தால் தான் தயிர் நன்கு உறையும். சூடாகவோ அல்லது ஆறியதாகவோ இருந்தால் தயிர் சரியாக உறையாது.

* டால்டா, நெய் போன்றவை கெட்டியாக இருக்கும்போது பாத்திரத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருக்கும். ஸ்பூனை சூடாக்கிக் கொண்டு எடுத்தால் சுலபமாக வரும்.

* உளுந்தம் பருப்பை வடைக்கு அரைக்கும் போது பச்சரிசியையும் கொஞ்சம் சேர்த்து அரைத்தால் வடை மொறுமொறுவென்று இருக்கும். அதே போல் வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமானால் சிறிது பச்சரிசி மாவினை சேர்த்தால் கெட்டியாகிவிடும்.

* சப்பாத்தி மாவு பிசையும்போது சிறிது பனைவெல்லத்தை காய்ச்சி அதில் சேர்த்து மாவு பிசைந்து சாப்பிட்டால் தனி டேஸ்ட்டாக இருக்கும்.

* சமையல் அறையில் இருக்கும் கத்தரிக்கோலை சாணைப்பிடிக்க ஈஸியான வழி கல் உப்பு ஜாடிக்குள்ளே சொருகி சிறிது நேரம் கத்தரித்தால் உப்புடன் உரசும் போது கத்திரிக்கோலில் சாணை ஏறிவிடும்.

* எந்த வகை பாயசம் செய்யும்போதும் ஏலக்காய்ப் பொடியைக் கடைசியாக சேர்க்க வேண்டும். ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரம் சேர்த்தால் அதன் வாசனை அறையெங்கும் மணக்கும்.

* உளுந்து கொழுக்கட்டை செய்யும்போது, தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் கொழுக்கட்டை தேங்காய் எண்ணெய் வாசனையோடு கமகமக்கும்.

Tags:    

Similar News