பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற முதியவர்
- ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவர்
- கண்டித்ததால் கல்லால் தாக்கிய கொடூரம்
திருச்சி,
துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி ஹரிஜன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி.இவரது மனைவி வள்ளி (வயது 45). இவர் செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம்போல் செங்காட்டுப்பட்டி சரசு என்பவரின் தோட்டத்தில் தனது ஆடுகளை மேய விட்டு கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது செங்காட்டுப்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜு (60) என்பவர் வள்ளியிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனை சற்றும் எதிர்பாராத அவர் அந்த முதியவரை கண்டித்தார். பின்னர் வீடு திரும்பினார். அப்போது அந்த முதியவர் வள்ளியை கல்லால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட வள்ளி துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் முதியவர் ராஜு மீது துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு மேய்க்க சென்ற பெண்ணிடம் முதியவர் தவறாக நடக்கும் என்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.