உள்ளூர் செய்திகள் (District)

ஆன்லைன் ரம்மி விளையாட தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2024-07-02 08:14 GMT   |   Update On 2024-07-02 08:14 GMT
  • பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
  • 25 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாக னத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி:

தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் மதிக்கோன்பாளையம் போலீசார் வழக்கம் போல் இருசக்கர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் வாகன தணிக்கையில் நிறுத்திய போது, அவர்கள் நிறுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பின் தொடர்ந்து தருமபுரி அருகே சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது, 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 2 பேரையும் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் இருவரும் தருமபுரி பகுதியைச் சார்ந்த ராஜா, வேடியப்பன் என்பது தெரியவந்தது. இருவரும் ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் வைத்திருந்ததும் அதில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்ததாகவும், அதற்காக வீட்டில் இருந்த நகைகளையும் அடகு வைத்துள்ளதும் தெரியவந்தது. இதனை அடுத்து பண தேவைகள் மற்றும் ஆன்லைன் விளையாடுவதற்காக பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மேலும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு, இருசக்கர வாகனம், சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் வரும், பெண்கள், முதியோர் என பலரிடம் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்மேடு பகுதியில் பெண் ஒருவரிடம் 6 அரை சவரன் தங்க சங்கிலி பறித்து சென்றதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தொடர் செயின் பறிப்பு சம்பவத்தில் வேடியப்பன் மற்றும் ராஜா 2 பேரையும் மதிக்கோன்பாளையம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 25 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News