உள்ளூர் செய்திகள்

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது

Published On 2024-07-27 08:46 GMT   |   Update On 2024-07-27 08:46 GMT
  • இருவரும் சிட்டம்மாள் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
  • சேதுபதி மீது 5 திருட்டு வழக்குகளும், 1 கொலை வழக்கும் உள்ளது குறிப்பிடதக்கது.

நத்தம்:

மதுரை மாவட்டம் அழகர்கோவில்-நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமர் (வயது25). இவரது மனைவி சிட்டம்மாள் (21). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் கடந்த 18-ம் தேதி மாலை நத்தம் அருகே கொரசின்னம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளபட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மற்றொரு பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் அவர்கள் ஓட்டி சென்ற பைக்கை வழிமறித்தனர். பின்னர் அவர்களை மிரட்டிய இருவரும் சிட்டம்மாள் கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசில் ராமர் புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் போலீஸ்-இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயபாண்டியன், கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்தனர். தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து அவர்கள் ஓட்டி சென்ற பைக்கை போலீசார் ஆய்வு செய்ததில் திருட்டில் ஈடுபட்டது மதுரை அழகப்பன் நகர் பகுதியை சேர்ந்த சேதுபதி (23), மதுரை புதூரை சேர்ந்த முகமது ராஜா (17) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மதுரையில் உள்ள சேதுபதியின் மாமனார் வீட்டில் பதுங்கி இருந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் சேதுபதி மீது 5 திருட்டு வழக்குகளும், 1 கொலை வழக்கும் உள்ளது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News