உள்ளூர் செய்திகள்

தாம்பரம் அருகே 2 பேர் கொலை

Published On 2024-07-02 05:49 GMT   |   Update On 2024-07-02 05:49 GMT
  • போலீஸ் விசாரணையில் கொலையுண்ட 2 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
  • இருவரது உடலையும் சுடுகாட்டிலேயே போட்டு விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.

தாம்பரம்:

தாம்பரம் அருகே உள்ள பெருங்களத்தூர் குண்டு மேடு சுடுகாட்டு பகுதியில் 2 பேர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து பீர்க்கன்கரணை போலீசார் அங்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் கொலையுண்ட 2 பேரும் அடையாளம் காணப்பட்டனர். பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த அண்ணாமலை, தமிழரசன் ஆகிய இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளிகள் யார்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கொலை செய்யப்பட்ட அண்ணாமலை, தமிழரசன் ஆகிய இருவரிடமும் நண்பர்களாக பழகியவர்களே இந்த கொலையை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

போதைப் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களிடையே ஏற்பட்டிருந்த மோதலே பூதாகரமாக வெடித்து கொலையில் முடிந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அதன் பின்னணி பற்றி போலீசார் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறார்கள். பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 5 பேர் நேற்று இரவு அண்ணாமலை மற்றும் தமிழரசனை ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.

தங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி இருவரையும் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வைத்து ஏற்பட்ட மோதலில்தான் 2 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் இருவரது உடலையும் சுடுகாட்டிலேயே போட்டு விட்டு கொலையாளிகள் தப்பிச் சென்று விட்டனர்.

சவாரிக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் அரி சற்று தூரத்தில் ஆட்டோவை நிறுத்தியிருந்து உள்ளார். நீண்ட நேரமாகியும் சவாரிக்கு வந்தவர்கள் திரும்பி வராததால் சுடு காட்டுக்கு சென்று அவர் பார்த்தபோதுதான் அண்ணாமலையும், தமிழரசனும் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர்.

இதனால் பதறியடித்துக் கொண்டு ஓடிய டிரைவர் அரி இதுபற்றி இன்று அதிகாலை 3 மணி அளவில் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன் பிறகே போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News