செய்திகள் (Tamil News)
ஊராட்சி மன்ற தலைவர்-உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 42 பேர் மனுதாக்கல்: கலெக்டர் நந்தகுமார் தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்-உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 42 பேர் மனுதாக்கல் செய்திருப்பதாக கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு 17.10.2016, 19.10.2016 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பு பதவியிடங்களுக்கு போட்டியிடுவதற்குரிய வேட்புமனுதாக்கல் நேற்று தொடங்கியது.
அந்த வகையில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றித்திற்குட்பட்ட கீழக்கரை ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு ஒருவரும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவயலூர் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு 3 நபர்களும் என மொத்தம் 4 பேரும் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு 38 நபர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். 3.10.2016 வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் 3.10.2016 ஆகும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.