கோவையில் கடையின் பூட்டை உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை
கோவை:
கோவை சுக்ரவார் பேட்டையை சேர்ந்தவர் கேவாரம். இவர் மரக்கடை மில்ரோடு பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று வேலை முடிந்ததும் வழக்கம் போல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
இன்று காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் வேலைக்கு வந்தபோது கடையின் பக்கவாட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் விரைந்து வந்து கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது மேஜையில் வைத்திருந்த ரூ.12 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இன்று பணத்தை வங்கியில் செலுத்த இருந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்து இருக்கிறது.
இதுபற்றி தெரியவந்ததும் துணை போலீஸ் கமிஷனர் பெருமாள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.
அப்போது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் வயர்களை துண்டித்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதோடு மட்டுமல்லாமல் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்யும் கருவிகளையும் எடுத்து சென்றது தெரியவந்தது.
மேலும் கடையில் பணம் இருப்பதை நன்கு தெரிந்து கொண்டவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. கொள்ளை நடந்த கடைக்கு கைரேகை நிபுணர்கள், துப்பறியும் மோப்பநாய் கொண்டு வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.