ஒட்டன்சத்திரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகை
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே சின்னக்காம்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் பஞ்சாயத்து மூலம் சப்ளை செய்யப்படும் குடிநீரும் சீராக வினியோகம் செய்யப்பட வில்லை. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டதால் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன் மற்றும் இடையகோட்டை போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.