செய்திகள் (Tamil News)

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2018-11-02 04:25 GMT   |   Update On 2018-11-02 04:25 GMT
வடகிழக்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. #Rain

கூடலூர்:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லைப் பெரியாறு, வைகை அணை உள்பட தேனி மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வடகிழக்கு பருவமழை தாமதமானது.

நேற்று வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டததில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஆங்காங்கே சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

இந்த மழை அடுத்த போக சாகுபடிக்கு கைகொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். கேரளாவில் சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து 1,268 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1,990 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 132.75 அடியாக உள்ளது.

வரு‌ஷநாடு மலை மற்றும் வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த வரும் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து 2,168 கன அடியாக உள்ளது. அது அப்படியே திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 69 அடியாகவே நீடிக்கிறது.

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.30 அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வருகிறது. 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையில் நீர் மட்டம் 126.11 அடியாக உள்ளது. 30 கன அடி நீர் வருகிறது. அது அப்படியே திறந்து விடப்படுகிறது.

தேக்கடி 5.2, கூடலூர் 1.4, சண்முகா நதி அணை 2, உத்தமபாளையம் 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News