உள்ளூர் செய்திகள்
கங்காதீஸ்வரர் கோவில்

சிங்கார சென்னை திட்டத்தில் கங்காதீஸ்வரர் கோவில் குளம் சீரமைக்கப்படுகிறது

Published On 2022-04-26 10:35 GMT   |   Update On 2022-04-26 10:35 GMT
கங்காதீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்கும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு 104, புரசைவாக்கத்தில் தமிழ்நாடு அரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கங்காதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் உள்ள குளத்தினை புனரமைத்து சீரமைக்கும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கங்காதீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்கும் பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைத்தனர்.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் இந்த கோவில் குளத்தில் தூர்வாருதல், குளத்தை சுற்றிலும் கரைகளை பலப்படுத்துதல், கருங்கல் படிக்கட்டுகள் அமைத்தல், கரைகளை சுற்றி நடைபாதை அமைத்து மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகள் நடைபெற உள்ளது.

மேலும், இந்த கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் மழைநீர் வடிகால் அமைத்து அவற்றிலிருந்து வரும் மழைநீரினை கோயில் குளத்தில் சேமிக்க மழைநீர் இணைப்புகள் அமைக்கவும், மழைநீர் இணைப்புகளில் வடிகட்டிகள் அமைக்கப்பட்டு சுத்தமான நீர் இக்கோயில் குளத்தில் சேமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையாளர் ஷேக் அப்துல் ரஹ்மான், அண்ணாநகர் மண்டல தலைவர் ஜெயின், நியமனக்குழு உறுப்பினர் வேலு, மாமன்ற உறுப்பினர் இளம்சுருதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News