உள்ளூர் செய்திகள் (District)

கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் டெங்கு கொசு புழு உற்பத்தி ஆகாத வகையில் பழைய டயர்களை கண்டறிந்து அவற்றை அப்புறப்படுத்தும் காட்சி.

பருவ மழை முன்னெச்சரிக்கை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2,322 பழைய டயர்கள் அகற்றம்: கலெக்டர் உத்தரவு

Published On 2023-07-05 07:32 GMT   |   Update On 2023-07-05 07:32 GMT
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார அறிவுறுத்தினார்.
  • 85 ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் சுமார் 2,322 பழைய டயர்கள் அகற்றப்பட்டது.

கள்ளக்குறிச்சி, ஜூலை.5-

தமிழகத்தில் பருவ மழை தொடங்க உள்ளதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு, கொசுப்புழு உற்பத்தி ஆகாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார அறிவுறுத்தினார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் மழைநீர் தேங்கி டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் பழைய டயர்களை கண்டறிந்து அகற்றும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் சுகாதாரத்துறையுடன், கிராம ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்கள் இணைந்து 85 ஊராட்சிகள் மற்றும் வார்டுகளில் சுமார் 2,322 பழைய டயர்கள் அகற்றப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலக்டர் கூறியதாவது:-

பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், சுற்றுப்புறத்திலும் மழைநீர் தேங்காவண்ணம், தொட்டிகள், உடைந்த மண்பாண்டங்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், உரல்கள் போன்றவற்றை அகற்றியும், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகள் மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்து, டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து முன்னெ ச்சரி க்கை நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் பொதுமக்கள் காய்ச்சல் என்றால் தாமாகவே கடைகளில் விற்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் தேவையான ரத்த பரிசோதனைகளை செய்து கொண்டு, காய்ச்சலுக்கான முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News