உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் 3 மாத ஆண் குழந்தை 130 புகைப்படங்களை சரியாக தேர்வு செய்து அசத்தல்

Published On 2024-09-19 08:50 GMT   |   Update On 2024-09-19 08:50 GMT
  • தனது 3 மாத குழந்தை ஆதிரனுக்கு புகைப்படங்களை அவ்வப்போது காண்பித்து குழந்தை நினைவாற்றல் திறனை அதிகரித்து வந்துள்ளார்.
  • குழந்தைகளுக்கான பிரிவில் புகைப்படங்களை நினைவாற்றல் செய்யும் பிரிவில் சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டி உள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் ஹரி பாஸ்கர். ஐ.டி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி லோகித் சோனாலி. இவர்களுக்கு ஆதிரன் என்கிற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. லோகித் சோனாலி தனது மகனுக்கு 2 மாதம் முதலே கருப்பு வெள்ளை நிறப்புகைப்படங்களை காண்பித்து வந்துள்ளார்.

இதன் பின்னர் சமூக வலைதளங்களில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 மாத பெண் குழந்தை புகைப்படங்களை காண்பித்து சரியாக சொல்லும் பிரிவில் நோபல் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பதை பார்த்துள்ளார்.

இந்நிலையில் தனது 3 மாத குழந்தை ஆதிரனுக்கு புகைப்படங்களை அவ்வப்போது காண்பித்து குழந்தை நினைவாற்றல் திறனை அதிகரித்து வந்துள்ளார். இதனை நோபல் சாதனை குழுவினருக்கு வீடியோ எடுத்து அனுப்பி உள்ளார்.

இதனை ஆய்வு செய்த நோபல் சாதனை குழுவினர் 3 மாத ஆண் குழந்தை ஆதிரன் பழங்கள், காய்கறிகள், எண், வண்ணம் மற்றும் வடிவம் அடங்கிய 130 புகைப்பட அட்டைகளை சரியாக அடையாளம் காண்பித்து வெற்றி பெற்றுள்ளார்.

இதனால் குழந்தைகளுக்கான பிரிவில் புகைப்படங்களை நினைவாற்றல் செய்யும் பிரிவில் சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டி உள்ளனர்.

இது குறித்து குழந்தை தாயார் கூறுகையில்,

குழந்தைகளுக்கு 3 வயது முதல் 6 வயது வரை புகைப்படங்களுக்கான நினைவாற்றல் அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு தொடக்கத்தில் இருந்து முறையாக பயிற்சி கொடுத்து வந்தால் அவர்கள் நினைவாற்றல் அதிகரிக்கும்.

அத்துடன் குழந்தை வளர்ந்து கல்வி உட்பட அனைத்திலும் அவர்களுக்கு நினைவாற்றல் மிகுந்த உதவியாக இருக்கும் எனவும், இதற்காக 10 தினங்களில் அவ்வப்போது புகைப்படங்களை காண்பித்து பயிற்சி கொடுத்ததாக தெரிவித்தார். 

Similar News