உள்ளூர் செய்திகள்

கேர்மாளம் அருகே 4-வது நாட்களாக இருளில் மூழ்கிய 50 மலைகிராமங்கள்

Published On 2024-07-18 04:55 GMT   |   Update On 2024-07-18 04:55 GMT
  • திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
  • 4-வது நாட்களாக அவதிபட்டு வருகின்றனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கேர்மாளம் மலை கிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகர் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு திம்பம் மலைபாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 4 நாட்கள் முன்பு ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே மின்கம்பி மீது மரம் விழுந்து மின்கம்பி துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரமும் தடைப்பட்டது. மலைகிராம மக்கள் அடர்ந்த வனப்பகு தியில் மின்சாரம் இல்லாமல் 4-வது நாட்களாக அவதிபட்டு வருகின்றனர்.

மலை கிராமம் கேர்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை, திங்களூர், கோட்டமாளம், மாவநத்தம், பெஜலட்டி, காளிதிம்பம், தடசலட்டி என 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு உள்ளது. மின் தடையால் ஊராட்சிக்கு செந்தமான மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் இல்லாமல் அவதி பட்டு வருகின்றனர்.

மின் மோட்டார்களை இயக்க முடியாததால் அருகிலுள்ள குட்டை மட்டும் ஆங்காங்கே பள்ளத்தில் தேங்கியுள்ள நீரை எடுத்து குடித்து வருகின்றனர். இதனால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 3 நாட்கள் மின்சாரம் இல்லாததால் மாவநத்தம், தடசலட்டி, இட்டரை ஆகிய பகுதிகளில் குட்டை நீரை குடித்து வாந்தி, பேதி ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது 4 நாட்களாக மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் 4 நாட்களாக எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சத்தியமங்கலம் இருந்து கேர்மாளம் வரை உள்ள மின் கம்பிகள் மிகவும் பழைமையானதாக இருப்பதால் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக கூறுகின்றனர். மின்கம்பியை சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவேண்டும் என மழைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News