உள்ளூர் செய்திகள் (District)

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது

Published On 2024-06-19 03:58 GMT   |   Update On 2024-06-19 03:58 GMT
  • கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டது.
  • வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி கடலூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் தஞ்சை மாவட்டம் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.

இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 கன அடி ஆகும். ஏரியின் மூலம் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் வீராண ஏரியின் நீர்மட்டத்திற்கு ஏற்ப இங்கிருந்து சென்னைக்கு குழாய் மூலம் குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

கோடை வெயில் மற்றும் விவசாய பயன்பாடு காரணமாக வீராணம் ஏரி கடந்த சில மாதங்களாக தண்ணீரின்றி வறண்டது.

இந்த நிலையில் கீழணையில் இருந்து கடந்த 25-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது.

இன்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக உயர்ந்து தனது முழு கொள்ளளவை எட்டியது. அதாவது வீராணம் ஏரியின் மொத்தமாக 1465 கன அடி நீர் தேக்கி வைக்கமுடியும். இதில் 1343.50 கன அடி நீர் தற்போது உள்ளது.

மேலும், வீராணம் ஏரி நிரம்பியதால் கீழணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது இன்று காலை முதல் நிறுத்தப்பட்டது. மேலும், நேற்று இரவு காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 14 மி.மீ. மழை பதிவாகியது.

இதனால் ஏரிக்கு வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் தற்போது காட்டுமன்னார்கோவில் பகுதியில் அறுவடை நடைபெறுவதால் பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு வீராணம் ஏரி 7 முறை நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு முதல் முறையாக நிரம்பியுள்ளது.

Tags:    

Similar News