எருதாட்ட நிகழ்ச்சி தடையை மீறி நடந்ததால் 16 பேர் மீது வழக்கு
- எருதை கயிறு பிடிக்காமல் கழட்டி விட்டதால் சுற்றிநின்ற பொது மக்களை எருது கொம்பில் குத்தி தூக்கி வீசியது.
- இது குறித்து பாலக்கோடு போலீசார் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீபுதூர் மாரியம்மன் திருவிழா கடந்த 3 நாட்களாக நடைப்பெற்று வருகிறது. 4-ம் நாளான நேற்று எருதாட்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில் எருதாட்ட நிகழ்ச்சி அதனை மீறி நடைப்பெற்றது.
இதில் வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவரின் எருதை கயிறு பிடிக்காமல் கழட்டி விட்டதால் சுற்றிநின்ற பொது மக்களை எருது கொம்பில் குத்தி தூக்கி வீசியது.
இதில் கொண்ட சாமனஅள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் (55), முனியப்பன் (42), தீத்தாரஅள்ளியை சேர்ந்த திவ்யா (19) ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் பாலக்கோடு கமால் சாகிப் தெருவை சேர்ந்த சிறுவன் மாபூப்பாஷா (15), மந்திரி கவுண்டர் தெருவை சேர்ந்த சக்திவேல் (17), பனாரஸ் தெருவை சேர்ந்த தன்சிம் (22), கொட்டுமாரனஅள்ளியை சேர்ந்த ராணி (47), அன்னா நகரை சேர்ந்த சண்முகம் (28) ஆகிய 6 பேர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பாலக்கோடு போலீசார் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.