உள்ளூர் செய்திகள் (District)

கடலூர் அருகே அரசு பஸ் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்து

Published On 2024-07-07 04:46 GMT   |   Update On 2024-07-07 04:46 GMT
  • நேற்று இரவு அரசு பஸ் வேதாரண்யத்துக்கு வந்து கொண்டிருந்தது.
  • டிரைவர் பலி, 22 பேர் படுகாயம்.

கடலூர்:

சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று இரவு அரசு பஸ் வேதாரண்யத்துக்கு வந்து கொண்டிருந்தது. பஸ்சை பச்சையம்காடு பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா (வயது 44) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை ரெட்டிச்சாவடியை அடுத்த கரிக்கன் நகர் மலட்டாறு பாலம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் அதிவேகத்துடன் மோதியது. இதில்பஸ்சின் முன் பக்கம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தது. மேலும் ஆக்சில் முறிந்து டயர் கழன்று ஓடியது.

மேலும் பஸ்சில் இருந்த டிரைவர் ராஜா தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். அப்போது பஸ் மோதிய வேகத்தில் டிரைவர் மீது கவிழ்ந்தது. இதனால் ராஜா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

மேலும் கண்டக்டர் திருக்குவளையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் பஸ்சில் பயணம் செய்த சென்னை ராமாபுரம் சொர்ணம் (வயது 48), கதிரேசன் (25), காரைக்கால் அஜிலியா மரியான் (65), 4 வயது பாத்திமா, 11 மாத குழந்தை ரேஷ்மா உட்பட 22 பயணிகள் காயமடைந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை மீட்டு புதுச்சேரி ஜிப்மர், அரசு மருத்துவமனை, கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சாலையில் கவிழ்ந்த பஸ்சை ஜே.சி.பி. மூலம் அப்புறப்படுத்தினர். உயிரிழந்த ராஜா உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News