திருப்பூர் அருகே தலையில் கல்லை போட்டு கட்டிட மேஸ்திரி படுகொலை
- புதர் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் காயத்துடன் பிணமாக கிடந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா குன்னத்தூர் அருகிலுள்ள கருமஞ்சிரை பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் உள்ள புதர் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் காயத்துடன் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குன்னத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்த காரணத்தினால் அவர் யார் என்று அடையாளம் காண முடியவில்லை.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திருப்பூர் சிவன் தியேட்டர் பின்புறம் உள்ள பகுதியைச் சேர்ந்த சந்திரன் (வயது 50) என்பதும் அவர் அப்பகுதியில் கட்டிட மேஸ்திரி ஆக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
அவர் எதற்காக குன்னத்தூர் வந்தார். அவரை கல்லால் தாக்கி கொலை செய்தவர்கள் யார்? டாஸ்மாக் கடை அருகில் கொலை நடைபெற்று இருப்பதால் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடைபெற்றதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.