உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கி மாணவர் படுகாயம்

Published On 2023-05-17 09:00 GMT   |   Update On 2023-05-17 09:00 GMT
  • புதர் மறைவில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென சஞ்சையை தாக்கியது.
  • இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரவேணு,

கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சஞ்சய்(வயது 16). இவர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விட்டு, முடிவுக்காக காத்திருக்கிறார்.

தற்போது விடுமுறை என்பதால் சஞ்சய் நேற்று தனது நண்பர்கள் 3 பேருடன் கொடநாடு செல்லும் சாலை பிரிவில் நெடுகுளா சுண்டட்டியில் உள்ள சுண்டட்டி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்தபடி நின்றிருந்தனர். அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த காட்டெருமை திடீரென சஞ்சையை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை நண்பர்கள் மீட்டு நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News