உள்ளூர் செய்திகள் (District)

மரக்கடை குடோனில் பயங்கர தீ விபத்து

Published On 2024-10-26 07:05 GMT   |   Update On 2024-10-26 07:05 GMT
  • குடோனில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் இருந்துள்ளது.
  • மரக்கட்டை என்பதால் தீ கொழுந்துவிட்டு வேகமாக எரிந்தது.

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள வாத்தியார் குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவருக்கு திருச்செந்தூர்-காயல்பட்டினம் சாலையில் வீரபாண்டியன்பட்டினம் அருகே மரக்கடை குடோன் உள்ளது.

இந்த குடோனில் தேக்கு, வேங்கை, கோங்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் வெட்டி தயார் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த குடோனில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் இருந்துள்ளது.


இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அந்த குடோனில் திடீரென தீ பிடித்துள்ளது. குடோனில் யாரும் இல்லாததால், தீ விபத்தை பார்த்த நபர் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவம் குறித்து திருச்செந்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முடியாமல் திணறினர்.

இதனால் சாத்தான்குளம் தீயணைப்பு துறையினர், டி.சி.டபிள்யூ. தனியார் தொழிற்சாலை தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. மரக்கட்டை என்பதால் தீ கொழுந்துவிட்டு வேகமாக எரிந்தது. சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. ஆனால் குடோனில் இருந்த அனைத்து மரக்கட்டைகளும் முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமாகியது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து ஏற்பட்டது எப்படி? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News