உள்ளூர் செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை- நகைகள் கொள்ளை

Published On 2024-07-09 06:32 GMT   |   Update On 2024-07-09 06:32 GMT
  • தடயவியல் நிபுணர்கள் கை ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள வாகைக்குளம் மாயன் நகரை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி காசம்மாள் (வயது 70). இவர்களுக்கு பாண்டியராஜன், பரசுராமன் என்ற 2 மகன்களும், பாண்டியம்மாள் என்ற மகளும் உள்ளனர்.

மகன்கள் இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். பாண்டியம்மாளை பிச்சை என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து பல்கலை நகர் அருகே உள்ள ராஜம் பாடியில் தனிக்குடித்தனம் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கராசு விபத்து ஒன்றில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் ராஜம்பாடியில் உள்ள தனது மகள் பாண்டியம்மாள் வீட்டில் தங்கி அவரது பராமரிப்பில் ஓய்வெடுத்து வந்தார்.

இதற்கிடையே காசம்மாள் மட்டும் மாயன் நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்துள்ளார். நேற்று இரவு காசம்மாளுக்கு தங்கராசு போன் செய்து ஏன் நீ மட்டும் அங்கு தனியாக இருக்கவேண்டும்? நீயும் மகள் பாண்டியம்மாள் வீட்டுக்கு வந்துவிட வேண்டியதுதானே? என்று கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்த காசம்மாள் விரைவில் மகள் வீட்டுக்கு வருவதாக தெரிவித்திருந்தார்.


இந்தநிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் காசம்மாள் வசித்து வந்த வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. வழக்கமாக அதிகாலையில் வாசல் தெளித்துவிட்டு செல்வார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கடும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் காசம்மாள் தலைக்குப்புற பிணமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்து உறைந்த நிலையில் காணப்பட்டது. உடனடியாக அவர்கள் இதுபற்றி அவரது கணவர் தங்கராசுவுக்கும், சிந்துப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த திருமங்கலம் டி.எஸ்.பி. அருள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்டனர். இதில் காசம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் விரசாரணையை தீவிரப்படுத்தினர். மோப்ப நாய் சார்லி வரவழைக்கப்பட் டது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் சோதனை நடத்தினர். இதில் காசம்மாள் கழுத்தில் கிடந்த 15 பவுன் தங்க தாலிச்சங்கிலி, பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகைகள் உள்பட 65 பவுன் நகைகளை 'மர்ம' நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது. கொள்ளையடிக்க வந்த கும்பல் காசம்மாளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மோப்ப நாய் சார்லி அந்தப் பகுதியில் சிறிது தூரம் சென்று திரும்பி வந்தது. சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் கை ரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொன்று 65 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News