உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் அ.தி.மு.க. போராட்டம் தொடர்பான சுவரொட்டியால் பரபரப்பு: 2 பேர் கைது

Published On 2024-06-23 04:11 GMT   |   Update On 2024-06-23 04:11 GMT
  • நாகர்கோவில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
  • சுவரொட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில்:

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இன்னும் பலர், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு தி.மு.க. அரசின் மெத்தன போக்கே காரணம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை (24-ந் தேதி) போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். குமரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் நாளை நடைபெறும் போராட்டத்திற்காக நாகர்கோவில் நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இதனை அறிந்த போலீசார் தடுத்தனர்.

மேலும் சுவரொட்டி ஒட்டிய 2 பேரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றதுடன் அவர்கள் வைத்திருந்த சுவரொட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

இது பற்றி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன், கவுன்சிலர் அக்சயா கண்ணன், மாநில நிர்வாகிகள் ராஜன், சந்துரு, ராணி பகுதி செயலாளர்கள் முருகேஸ்வரன், ஜெய கோபால், அணி செயலாளர்கள் ரபீக், ராஜாராம் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட சுவரொட்டிகளை ஒப்படைக்க வேண்டும். பிடிபட்ட நபர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகையில் ஈடுபட்ட வர்களை போலீசார் சமரசம் செய்தனர். தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு சுவரொட்டிகள் ஓட்டியதாக பிடித்து வந்த 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையில் நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க.வினர் அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News